தமிழ்ப் பாராயணத்திரட்டு

 

வியாழக்கிழமை

அநுவாத நூன்மாலை

சர்வஞானோத்தரம் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம்:
சர்வ ஞானோத்தரம் எனப்படும் உப ஆகமத்தில் ஓர் அத்யாயமே ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆகும். இது 1933-இல் ஸ்ரீபகவானால் வடமொழியிலிருந்து ஓர் உள்ளுந்துதலால் தாமதமின்றி உடனுக்குடன் மொழி பெயர்க்கப்பட்டது. ஞான மார்க்கத்தில் பிரவேசித்துள்ள சாதகர்களுக்கேற்ற உபதேசங்களை, ஈஸ்வரன் குகனுக்கு அருளியவாறாக அமைந்துள்ள இக்கிரந்தம் ஸ்ரீபகவானது உபதேசங்களுக்கு உப-பாகமாக அமைந்துள்ளது எனக் கூறலாம்.

பகவத் கீதாசாரம்:

உபநிஷத்துக்கள், பிரம்மசூத்ரம், பகவத்கீதை, இந்த மூன்றும் பிரஸ்தானத்ரயம் எனக் கூறப்படும். இந்த மூன்றிலும் பகவத் கீதையானது தனிச் சிறப்புடையது.

சகல உபநிஷத்துக்களின் சாரத்தைப் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருச்சுனனுக்கு, கீதாம்ருதமாக வடித்துக் கொடுத்தார்.

இந்த பகவத் கீதை எழுநூறு சுலோகங்கள் கொண்டது. பதினெட்டு அத்தியாயங்களாக வகுக்கப்பட்டு இருக்கின்றது.

1940இல் ஓர் சமயம் பகவான், தரிசனத்திற்கு வந்திருந்த பண்டிதர் ஒருவருடன் பகவத்கீதையின் பெருமையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ரமண பகவானது சீரடியார் அன்பர் குர்ரம் சுப்பராமய்யா, ஸ்ரீ பகவானிடம், 700 சுலோகங்களையும் படிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால், பகவத்கீதையை நித்ய பாராயணத்திற்கு அனுகூலமாக, சுருக்கமாக வகுத்துத் தந்தருளுமாறு வேண்டினார். அவருடைய வேண்டுகோளுக்கிரங்கிய பகவான், எழுநூறு சுலோகங்களைக் கொண்ட பகவத் கீதையிலிருந்து, மணிகளைப் போன்ற நாற்பத்திரண்டு சுலோகங்களை எடுத்துத் தொகுத்துக் கொடுத்தார். அதுவே பகவத் கீதாசாரம் எனும் இவ்வரிய படைப்பு.

வெளிநாட்டவர் ஒருவர் பகவானுக்கு மிகவும் பிடித்த கீதை சுலோகம் எது எனக் கேட்டபொழுது, எல்லாமே என்று பதிலளித்தார் ஸ்ரீபகவான். ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும்படி வினவ, 10ஆம் அத்தியாயத்தில் 20ஆவது சுலோகத்தைக் குறிப்பிட்டார். அச்சுலோகமும் இந்த 42இல் அடங்கும்.
பிறகு ஸ்ரீ பகவான் அந்த நாற்பத்திரண்டு வடமொழி சுலோகங்களை, தமிழ் வெண்பாவாகவும், மலையாளத்தில் கும்மிப் பாட்டாகவும் மொழிபெயர்த்து அருளியுள்ளார். இம்மொழிபெயர்ப்புகள் வடமொழி சுலோகங்களை ஒட்டியே செய்தருளப்பெற்றன.

Back