தமிழ்ப் பாராயணத்திரட்டு

 

ஸ்ரீ ரமணாச்ரம தமிழ்ப் பாராயணத்தின் வரலாறு

கந்தாச்ரம நாட்களிலிருந்தே நடைபெற்ற புனித நூல்களின் பாராயணமே தமிழ்ப் பாராயண ஆரம்பகாலமாகும். பண்டைய அத்வைதக் கிரந்தமான ரிபுகீதையும் (சிவரஹஸ்யத்திலுள்ளது) மற்றைய வேதாந்த மரபு சார்ந்த அத்வைத பரமான முக்கிய நூல்களும் ஸ்ரீபகவானால் பாராயணக் கிரமத்தில் கொண்டு வரப்பட்டன. சைவ சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோருடைய தேவாரப் பாடல்களும், முக்கியமாக மாணிக்கவாசகருடைய திருவாசகமும் பகவானால் பெரிதும் மதிக்கப்பட்டதுடன் அவையாவும் தாயார் அழகம்மாளது மஹா சமாதி தினத்தன்று இரவு முழுவதும் (மே மாதம் 19ஆம் தேதி 1922) பாடப்பெற்றன. பகவான் இயற்றிய பாடல்களின் பாராயணமும் பெரிதும் ஊக்குவிக்கப் பட்டது.
பகவானது கவிதைத் தொகுப்புகளை மனம் ஊன்றிப் படித்தலுடன் பாராயணம் செய்வதனால் அடையும் ஆன்மிக லாபத்தை நன்குணர்ந்த அடியார்கள் பாராயண க்ரமத்தை முறையாக ஆரம்பித்தனர். 1920லேயே பகவானிடம் வந்தவரும் பகவானது நீண்டநாள் அடியவரும் அவரது அணுக்கத் தொண்டருமான ஸ்ரீகுஞ்சு சுவாமிகள் தனது அனுபவங்களை நினைவுகூறும் எனது நினைவுகள் புத்தகத்தின் மூலம் ஸ்ரீபகவானது தாயார் தினமும் காலை 4 மணியிலிருந்து 5 மணிவரை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்யும் வழக்கத்தைக் கைக்கொண்டிருந்தார் என்பதை அறிகிறோம். அன்னையார் தனது பாராயணத்தை முடித்தவுடன் ஸ்ரீபகவானது பக்தர்கள், ஸ்ரீ பகவானருளிய அருணாசல அக்ஷரமணமாலை, அப்பளப்பாட்டு முதலியவற்றுடன் விசேடமாக ஸ்ரீபகவானால் தமிழாக்கப் பட்ட ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தையும் பாராயணம் செய்வதை தினசரி வழக்கமாகக் கொண்டிருந்தனர். பகவான் அவ்வப்போது இயற்றிய புதிய பாடல்களையும் அந்தப் பாராயண முறையில் அவ்வப்போது உள்ளடக்கி வந்தனர். இவ்வாறாக 1940-லேயே 15 நாள் பாராயணக் கிரமமாக தமிழ்ப் பாராயணம் விரிவுற்றது.

நாள் 1 : அண்ணாமலையைப் போற்றி மூவர் பாடிய தேவாரத் தொகுப்பு
நாள் 2 : ஸ்ரீ அருணாசல தத்துவம், ஸ்ரீ அருணாசல மாகாத்மியம், ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
நாள் 3 : ஸ்ரீ அருணாசல நவமணிமாலை, ஸ்ரீ அருணாசல பதிகம், ஸ்ரீ அருணாசல அஷ்டகம், அப்பளப்பாட்டு, ஆன்ம வித்தை
நாள் 4 : உபதேச உந்தியார் மற்றும் மலையாள, தெலுங்கு, வடமொழிகளில் உபதேச சாரம்
நாள் 5 : உள்ளது நாற்பது, உள்ளது நாற்பது - அனுபந்தம்
நாள் 6 : சத்தர்சனம் (உள்ளது நாற்பது அனுபந்தத்துடன் மலையாளத்தில்)
நாள் 7 : தேவிகாலோத்தரம்
நாள் 8 : ஆன்ம சாக்ஷாத்காரம், குரு ஸ்துதி, அத்தாமலகம்
நாள் 9 : பகவத் கீதாசாரம் (தமிழ், மலையாளம், வடமொழி மூன்றிலும்)
நாள் 10 : ஆன்மபோதம், ஏகான்ம பஞ்சகம்
நாள் 11 : தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், விவேக சூடாமணி, சிவானந்த லஹரி இவற்றிலிருந்து ஸ்ரீ பகவானால் தேர்ந்து எடுக்கப்பெற்ற சில பாடல்கள் (தமிழிலும் சமஸ்கிருதத்திலும்) இவற்றுடன் தாயுமானவரின் பாடல்கள் சில
நாள் 12 : சத்தியமங்கலம் வேங்கடரமண ஐயர் இயற்றிய ஸ்ரீ ரமண ஸ்துதி பஞ்சகம்
நாள் 13 : சிவப்பிரகாசம் பிள்ளையவர்கள் இயற்றிய ஸ்ரீ ரமண சத்குரு மாலை, ஸ்ரீ ரமண தேவமாலை (1-28)
நாள் 14 : பிள்ளையவர்களின் ஸ்ரீ ரமண தேவமாலை, (29-42), விண்ணப்பம்
நாள் 15 : பிள்ளையவர்களின் ஸ்ரீ ரமண பாதமாலை, மணிவாசகரது திருக்கோவையார் (ஒரு பாடல்), சுந்தரமூர்த்தி நாயனாரது திருச்சுழி தேவாரம்

இந்தப் பாராயண முறை தமிழ், தெலுங்கு, மலையாளப் பாடல்களைக் கொண்டிருப்பினும், 1935இல் துவங்கிய வேதபாராயணத்திலிருந்து தனிப்படுத்திக் காட்டும் வகையில் தமிழ்ப் பாராயணம் என அழைக்கப்பட்டது. இத்தோத்திரத் தொகுப்பு நான்கு வகைத் துதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அவை:

1. பகவான் இயற்றிய தமிழ், தெலுங்கு, மலையாள சம்ஸ்க்ருத பாடல்கள்
2. ஸ்ரீ பகவானால் வடமொழியிலிருந்து தமிழிலும் மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட பாடல்கள்
3. பண்டைய தமிழ் மற்றும் வடமொழி நூல்களிலிருந்து ஸ்ரீ பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்
4. அன்பர்களால் ஸ்ரீ பகவான் மீது பாடப்பெற்ற பாடல்கள்
மாலை 6.30 மணிக்குத் துவங்கும் இவற்றின் அன்றாட பாராயண வழக்கம் அன்றுமுதல் இன்றுவரை ஆச்ரமத்தில் (சில மாறுதல்களுடன்) நடைபெறுகின்றது.

ஆச்ரம இன்றைய பாராயண முறை:

தமிழ்ப் பாராயணத்தின் ஆரம்பகாலத்தில், பாராயணத்திற் குரிய பாடல்கள் ஓர் குறிப்பேட்டில் எழுதி வைக்கப்பட்டு, பாராயணம் செய்ய விரும்புவோரால் அவரவர் கையேட்டில் அவர்களாலேயே பிரதி எடுத்துக் கொள்ளப்பட்டன. சிற்சில சமயங்களில் ஸ்ரீபகவானே அவற்றை எழுதித் தந்தருள வேண்டுமென்று விண்ணப்பிக்கும் அடியவர்களின் வேண்டுகோட்கட்கு செவிசாய்த்து ஸ்ரீபகவானே அவையனைத்தையும் எழுதியருளியதும் உண்டு. சுவாமி சிவானந்தா என்ற ஸ்ரீ பகவானது அணுக்கத் தொண்டர் ஒருவரிடமிருந்து அத்தகைய கையேடு ஒன்று 1987இல் கண்வாச்ரம அறக்கட்டளையால் பெறப்பட்டு முதன்முறையாக அச்சேற்றப்பட்டது.
ஸ்ரீபகவானது சந்நிதியில் குஞ்சு சுவாமிகள் வழிகாட்டுதலில் முறையான தமிழ்ப் பாராயணம், மீண்டும் 1985இல் துவங்கப்பட்டது. ஸ்ரீ ரமண நூல் திரட்டில் உள்ள பாடல் வரிசைக்கிரமப்படி திங்கள் முதல் வெள்ளி வரையிலும், சனிக்கிழமை ஸ்ரீ ரமண ஸ்துதி பஞ்சகமும் தற்போது பாடப்பெற்று வருகின்றன.


Back